நகரத்தை ஒட்டி புதிதாய் ஒரு கட்டிடம் !
கண்ணாடி மாளிகையாய் கட்டும் கம்பீரம் !
முதல் பார்வையில்
வாய் பிளந்த அந்த மனிதனுக்கு
மாளிகை வழி பிளந்தது !
இனி அவன் அலுவலகம் இதுதான்!
சுற்றிலும் பூங்காவாய் ! நடுவில் மெல்லிய நீரோடையாய்!
புற்களின் பால் சிரிப்பாய்! மிச்ச மரங்களின் தலையாட்டலாய்!
மனிதன் காங்க்ரீட் காடுகளை தாண்டி
முன்னேறி விட்டான் என்பதன் சாட்சியாய்!
தேநீர் இடைவேளைக்கு வந்தவன்
சுற்றி பார்த்ததில் சொக்கி போனான்!
அவனை சுற்றி வண்ணத்து
பூச்சிகள் வேறு வழி காட்டின!
மீண்டு வரும் போதுதான் தெரிந்தது !
வழி தவறிய வண்ணத்து பூச்சிகள் சில
கண்ணாடி மாளிகையில் சிறை பட்டன என்று !
பாவம் அந்த சின்ன உயிர் சுற்றி மூடியது
கண்ணாடி என்று அறியாமல் முட்டி மோதின !
சில விட்டம் பார்த்து உயிர் துறந்தன!
பார்த்த அவன் பதறி போனான்!
மனித முன்னேற்ற கண்மூடி பாதையில்
சிரமங்கள் எல்லாம் சின்ன உயிர்களுக்கு தான் !
ஓய்ந்து போன அவைகளை ஒவோன்றாய் பிடித்து
தோட்டத்தில் வைத்து வழியனுப்பினான் !
இன்று அவன் புண்ணிய கணக்கில் ஆறு எண்கள் கூடியிருக்கும் !
அவனுக்குள் சற்றே பெருமிதம் ! நான் மிகவும் நல்லவன் !
கருணை உள்ளவன் ! மற்ற உயிர்களுக்கு நேசம் உள்ளவன் !
கடவுள் நம்மை கவனித்து கொண்டிருக்கிறார் !
அதனால் தான் வாழ்கையின் வெகு துரத்திற்கு கைப்பிடித்து வந்திருக்கிறார் !
சந்தோஷ நெஞ்சத்துடன் வேலை என்னும் கடலில் முழ்கிப் போனான்!
நேரம் தாண்டி வேலை அவனை வெளியே துப்பியது !
பசித்த வயிறுடன் வெளியே வந்தான் !
கண்ணாடி சிறைகள் தண்ணீரால் வழிந்து போயிருந்தன !
மழை ! எத்தனை பேர் வெறுத்தாலும் எனக்கு மட்டும்
எப்போதும் பிடித்த மழை !
நடை ஓட்டமாகியது ! புற்கள் அவன் முன் வந்தன !
செடிகள் குளித்து முடித்த குழ்ந்தையாய் நீர் வடியும் முகத்தோடு!
அப்போது தான் அவன் கவனித்தான் இரண்டு இறக்கைகள் மட்டும் !
ஐயோ என்ன ஆயிற்று !
வண்ணத்து பூச்சிகள் ஒளிந்துகொள்ள இடம் இல்லையா ?
ஒன்று, இரண்டு, பலவாய் பல இடங்களில் புதைந்து கிடந்தன !
பத்து நிமிடம் பெய்த மழையில் பலியான பூச்சிகளின் எண்ணிக்கை என்ன ?
ஈரம் சொட்ட சொட்ட இயற்கை அவனை பார்த்து
சிரித்து கொண்டிருந்தது ! வெள்ளையாய் !
- கமலீ புத்திரன்
No comments:
Post a Comment